1,000 பெண்கள், திருநங்கையருக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்; அமைச்சர் கணேசன் அறிவிப்பு

சென்னை : ''அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, 1,000 பெண்கள், திருநங்கையருக்கு ஆட்டோ வாங்க, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்,'' என, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் அறிவித்தார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நாகை மாவட்டம், திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ.,யில், 3.50 கோடி ரூபாயில் மாணவர் விடுதி கட்டடம் கட்டப்படும். 32 அரசு ஐ.டி.ஐ.,க்களில், சிதிலமடைந்த கட்டடங்களை சீரமைத்து, உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், 67.64 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

அரசு ஐ.டி.ஐ.,க்களில் உள்ள 50 விடுதிகள், 22.98 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், 20.25 கோடி ரூபாயில், 50 வசதி மையங்கள் அமைக்கப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக இருந்து, 60 வயது பூர்த்தி அடைந்த, குடும்பத்தினரின் கவனிப்பும், பராமரிப்பும் இல்லாத 50 பேர் தங்கும் வகையில், சென்னையில் இரண்டு முதியோர் இல்லங்கள் துவங்கப்படும்.

வேலை செய்யும்போது விபத்தில் மரணம் அடையும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உதவித்தொகை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களின் குழந்தைகள், செவிலியர் பட்டப்படிப்பு பயில, 3,000 ரூபாய், உணவு தயாரித்தல் மற்றும் சேவை பட்டப்படிப்பு பயில, 3,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

இந்த வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையில், 1,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். பிஎச்.டி., பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு, 15,000 ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,000 பெண்கள், திருநங்கையர் சொந்தமாக புதிய ஆட்டோ வாங்க, தலா, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

வாரியத்தில் பதிவு செய்துள்ள 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் சம்பளத்தில், 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 45.21 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement