புதுச்சேரி - அமெரிக்கா பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பல்கலைக்கழகம், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் இரட்டை பட்டப்படிப்பு திட்டங்கள், மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் கல்வி நிகழ்வுகளை இணைந்து நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் தரணிக்கரசு, புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர் கல்வியில் சர்வதேச மயமாக்கலுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பன்முக கலாசார கற்றல் மற்றும் கூட்டு ஆராய்ச்சிக்கான வளமான வாய்ப்புகளைத் திறக்கிறது, என்றார்.

டெக்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தின், மெக்காய் வணிகக் கல்லுாரி டீன் சஞ்சய் ராமச்சந்தர், இந்த ஒப்பந்ததை 'சிவப்பு எழுத்து நாள்' என்று விவரித்தார். உதவி டீன் சேத் பிரீ, பல்கலைக் கழக மாணவர்களுடன் தனது நேர்மறையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் டீன் விக்டர் ஆனந்த்குமார், வணிகத் துறையின் புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் டேனியல் லாசர், ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். இது, பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்கலைக்கழக அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வில் இரு நிறுவனங்களின் ஆசிரியர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement