குடிநீர் கட்டணம் உயர்வு இன்று வெளியாகிறது அறிவிப்பு

பெங்களூரு: கடந்த 11 ஆண்டுகளுக்கு பின், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, குடிநீர் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

பெங்களூரு குடிநீர் வாரிய மத்திய அலுவலகத்தில், அதன் தலைவர் ராம் பிரசாத் மனோகர் நேற்று அளித்த பேட்டி:

கடந்த 11 ஆண்டுகளில், பெங்களூரில் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. குடிநீர் வாரியம் மாநில அரசின் உதவி இல்லாமல், தனித்து செயல்படுகிறது. மக்களிடம் வசூலாகும் குடிநீர் கட்டணமே, குடிநீர் வாரியத்துக்கு கிடைக்கும் முக்கியமான வருவாய்.

பத்து ஆண்டுகளில், மின் கட்டண செலவு, 107 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போன்று நிர்வகிப்பு செலவும், 122.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மாதந்தோறும் நிர்வகிப்பு செலவுக்கு 200 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் 120 கோடி வருவாய் கிடைக்கிறது. 80 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படுகிறது.

நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். மக்களுக்கு சுமை ஏற்படாமல் கட்டணம் உயர்த்தி, இன்று அதிகாரப்பூர்வமாக உத்தரவு வெளியிடப்படும்.

குடிநீரை சிக்கனமாக செலவிடுவது பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மறுசுழற்சி நீரை பயன்படுத்த ஊக்கமளிப்பது, எங்களின் குறிக்கோளாகும். குடிநீர் கட்டணம் மக்களுக்கு சுமையாக இருக்காது.

வரும் நாட்களில் ஆண்டுதோறும், ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே, மூன்று சதவீதம் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். வர்த்தக பயனாளிகளுக்கு, மாதந்தோறும் 50 முதல் 60 ரூபாய் சுமை ஏற்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement