தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர விழா கோலாகலம்

காவல் பைரசந்திரா: பெங்களூரு காவல் பைரசந்திராவில் உள்ள தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
பெங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகரில் பிரசித்தி பெற்ற தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இங்குள்ள மலையில் பல ஆண்டுகளுக்கு முன், துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் பூஜித்து வந்த வேலை, இந்த மலையில் நிறுவி, அனைவரையும் வழிபட வைத்தார். காலப்போக்கில் வேல் அருகில் முருகன் மற்றும் துறவி சிலைகளை இப்பகுதி மக்கள் பிரதிஷ்டை செய்தனர்.
குமரகுருபரர்
அறுபடை முருகன் கோவிலில் ஒன்றான துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிறவிலேயே வாய் பேச முடியாத குமரகுருபரரை அருட்சக்தியினால் பேச வைத்து பக்தராக்கினார் முருகப்பெருமான்.
அதுபோன்று, இப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரின், 9 வயது வரை பேசாமல் இருந்த குழந்தையை, ஆடி கிருத்திகை அன்று பேச வைத்தார் தங்கமலை முருகப்பெருமான். இதுபோல இவரை வணங்கி சென்ற பின், அரசியலில் அடிப்படை உறுப்பினராக இருந்தவர்கள், பெரிய அளவில் வளர்ந்துள்ளனர்.
முருகப்பெருமானிடம் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை தயக்கமின்றி சொல்வதற்காகவே, வள்ளி, தெய்வானையை சற்று தள்ளியே பிரதிஷ்டை செய்துள்ளனர்.
மனைவியுடன் நவக்கிரஹங்கள் உள்ள சன்னிதியும் இங்குள்ளது. தத்துவங்களில் ஒன்றான சைவ சித்தாந்தம் சொல்வது போன்று, 84 லட்சம் பிறப்புகளில் இருந்து விடுபட இக்கோவிலில் 84 படிகளை அமைத்து உள்ளனர்.
படிப்பாதையில் இடும்பன் காவடி எடுக்கும் காட்சியும், அவ்வையாருக்கு அருள் செய்யும் முருகனுடைய சிற்பங்களும் உள்ளன.
முருகனை தரிசிப்போர் வாழ்வில் பணமும், புகழும் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விழாக்கள்
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆடி மாதத்தில் கடைசி வெள்ளி கிழமையில் சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பக்தைகள் பங்கேற்பர்.
நவம்பர் மாதம், முருகப்பெருமானின் வேலுக்கு வேல் பூஜை செய்து, ஐந்து நாட்கள் உற்சவம் கொண்டாடப்படுகிறது.
ஒருமுறையேனும் தங்கமலை முருகப்பெருமானை தரிசித்தால் தங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் பொங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இத்தகைய கோவிலில், இன்று பங்குனி உத்திரம் திருவிழா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு காவல் பைரசந்திரா என்.பி., சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா முனிராஜு, தலைவர் தயாளமணி ஆகியோர் முன்னிலையில் புறப்படுகிறது.
அங்கிருந்து தொட்டண்ண நகரில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் தீபாராதனை முடித்து, தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தடைவர். மேலும் விபரங்களுக்கு 99729 99663, 98453 56637, 97383 42151, 89510 08717 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளமணி, பொது செயலர் டி.முனேகவுடா, உதவி தலைவர்கள் ஆர்.
பெருமாள், ஜனார்த்தன், பொருளாளர் மகேந்திரன், உதவி செயலர்கள் சேகரன், பி.மோகன் செய்துள்ளனர்.
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி. (அடுத்த படம்) கோவில் கொடி கம்பம் அருகில் உள்ள ஓம் பிரணவ மந்திரம்
மேலும்
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
-
நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்
-
அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
-
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை
-
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்த பாலியல் தொல்லை: மாஜி கிரிக்கெட் வீரரின் மகள் அதிர்ச்சி தகவல்
-
2 ஆண்டில் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்