பிரீமியர் லீக் கிரிக்கெட்: சென்னை அணி தொடர்ந்து 5வது தோல்வி

சென்னை: சென்னை அணிக்கு எதிரான பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் கோல்கட்டா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து 5 தோல்விகளை தழுவியது.


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் ரஹானே, பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.


தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரச்சின், கான்வே ஜோடி சோபிக்கவில்லை. 12 ரன்களில் கான்வேயும்,4 ரன்களிலும் ரச்சினும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தொடக்கம் அளித்தனர்.


அதன் பின்னர் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் ஜோடி ஓரளவு ஆடினர். ஆனாலும் இவர்களும் நிலைக்கவில்லை. திரிபாதி 16 ரன்களிலும், விஜய் சங்கர் 29 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.அஸ்வின் 1 ரன்னில் வெளியேறினார்.ரவிந்திர ஜடேஜா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, 1 ரன்னில் சுனில் நரைய்ன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் அதிர்ந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.


இதையடுத்து, 104 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி கோல்கட்டா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்கும், சுனில் நரைய்னும் ஆடினர். இருவருமே தொடக்கம் முதலே சென்னை அணி பந்துவீச்சை சிதறடித்தனர்.


அணியின் ஸ்கோர் 46 ரன்களாக இருந்தபோது டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சுனில் நரைய்னுடன் ரஹானே கை கோர்த்தார். ஸ்கோர் 85 ரன்களை எட்டியபோது சிக்சர்களாக விளாசிய சுனில் நரைய்ன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.


பின்னர் ரஹானேவும், ரிங்கு சிங்கும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த கோல்கட்டா அணி, 10.1 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ரஹானேவும், ரிங்கு சிங்கும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Advertisement