செயல் அலுவலர் மீது கோபம் சுவாமி வாகனத்திற்கு தீவைப்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, கோவில் மூலஸ்தானம், பின்புற அறையில் இருந்த மர ரிஷப வாகனம் தீயில் எரிந்தது. இது தொடர்பாக டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், கண்ணன், 58, என்பவரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கண்ணன், கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகளை சொந்த செலவில் செய்து வந்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலர் ராஜேஷ், தனி நபர்கள் சார்பில் எந்த பணியும் செய்யக்கூடாது என்றதுடன், கண்ணன் சார்பில் கோவிலில் வைத்திருந்த பீரோ, இதர பொருட்களை உடனே காலி செய்யுமாறு நிர்பந்தித்துள்ளார்.

இதனால் செயல் அலுவலர் மீது கோபமடைந்து, மர ரிஷப வாகனத்திற்கு தீ வைத்ததை கண்ணன் ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement