மாணவியை தனிமைப்படுத்திய விவகாரம்; உண்மைக்கு மாறான தகவல் பரப்பி ஆதாயம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, தனியார் பள்ளியில் மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் அமர வைத்து தேர்வு எழுதிய விவகாரத்தில், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி சிலர் ஆதாயம் பார்ப்பதாகவும், பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாகவும் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே செங்குட்டுப்பாளையத்தில் உள்ள சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி, 'பூப்பெய்தியதால்' அவரை தனிமைப்படுத்தி, படிக்கட்டில் அமர வைத்து முழுஆண்டு தேர்வை எழுத வைத்த வீடியோ வெளியானது.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று செங்குட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

கிராமத்தில் பல சமுதாய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். சில நாட்களுக்கு முன், கிராமத்திலுள்ள பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.

இப்பள்ளியில், சமூக வேறுபாடின்றி குறைவான கட்டணத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு சிலர், ஒரு அமைப்பின் பெயரை பயன்படுத்தி ஜாதி என்ற பெயரில் தவறாக சித்தரித்து ஒற்றுமையாக உள்ள கிராமத்தில் வன்முறையை துாண்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.

மேலும், ஒரு சிலர் அமைப்பின் பெயரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்படுகின்றனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement