வகுப்பறை சுவர்களில் சாணம் பூச்சு.. டில்லி கல்லூரி முதல்வரின் வினோத செயல்

12

புதுடில்லி: டில்லி பல்கலைக்குட்பட்ட கல்லூரியின் வகுப்பறையில் மாட்டு சாணத்தை கல்லூரி முதல்வர் பூசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி பல்கலைக்குட்பட்ட லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரத்யூஷ் வத்சலா, அவரே தன்னுடைய கைகளால் வகுப்பறைகளில் உள்ள சுவற்றில் மாட்டு சாணத்தை பூசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து கல்லூரி முதல்வர் பிரத்யூஷ் வத்சலா கூறியதாவது: சுவர்களில் சாணம் பூசியது, இந்திய பாரம்பரியத்தை பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்துவது குறித்து கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆய்வின் ஒரு பகுதியாகும். தொடர்ந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு ஒருவாரத்தில் முடிந்து விடும். அதன் பிறகு இது பற்றி விளக்கமாக கூறுகிறேன்.

ஒரு சுவற்றின் ஒரு பகுதியில் நானே சாணத்தை கைகளால் பூசினேன். இயற்கையான சாணத்தை கையில் தொடுவது எந்த தீங்கையும் கொடுக்காது. சிலர் இதுபற்றி தெரியாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர், எனக் கூறினார்.

Advertisement