கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம்' ஏழு பேர் கைது; ரூ. 1.09 கோடி, கார் பறிமுதல்

கோவை : கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை, போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 1.09 கோடி பறிமுதல் செய்தனர்.

கோவை ராம்நகர் பகுதியில், ஐ.பி.எல்., சூதாட்டம் நடப்பதாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் வந்தது. சிறப்பு தனிப்படை போலீசார், ராம்நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது, ஒருவர் ஐ.பி.எஸ்., சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவரிடம் விசாரித்த போது, மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட சொக்கம்புதுாரை சேர்ந்த நந்தகுமார், 32, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ராஜேஷ், 35, விபின், 44, ஜிதேந்திர சிங், 41, காட்டூரை சேர்ந்த சவுந்தர், 29, விபுல், 36, ராம் நகரை சேர்ந்த அருண், 37 ஆகிய ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். ரூ. 1.09 லட்சம் பணம், இரண்டு கார்கள், 12 மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பவம் குறித்து, காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஏழு பேரையும் ஜாமினில் விடுவித்தார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

லோட்டஸ்247, ஜே.டி., டென்10, மேங்கோ777' போன்ற சட்ட விரோத இணையதளங்களை பயன்படுத்தி, இந்த சூதாட்டத்தை அரங்கேற்றுகின்றனர். பல லட்ச ரூபாய் பணம் செலுத்தி, சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், பெரிய தொழில் செய்யும் நபர்கள். இவர்களுக்கு பணத்தை அனுப்பினால் இணையதளத்தில் கணக்கை துவக்கி தருகின்றனர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப, 'பாயின்ட்ஸ்' கொடுக்கின்றனர். அவற்றை வைத்து விளையாடுகின்றனர்.

வெற்றி பெற்றால் 'பாயின்ட்ஸ்' அதிகரிக்கும். பாயின்ட்களை பணமாக பெற்றுக்கொள்கின்றனர். பண பரிமாற்றம் அனைத்தும் ரொக்கமாகவே உள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement