பா.ம.க.,-தே.மு.தி.க.,வுடன் கூட்டணியா? முயற்சி செய்வோம் என நயினார் நாகேந்திரன் பதில்

6


சென்னை: ''பா.ம.க., தே.மு.தி.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு முயல்வோம்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
கட்சி ஆரம்பித்தவுடன் மத்திய அரசை விரட்டியடிப்போம் என்று விஜய் கூறுவது வேடிக்கையான விஷயம். தி.மு.க.,வை வீழ்த்த பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளாக எல்லாத்தையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வோம். பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு முயல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.



அரசியல் ரீதியாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில தி.மு.க., ஏஜென்ட்டுகள்! ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!


ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது. இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!


முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது! இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்! பதற்றம் வேண்டாம்,

இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது!
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement