டில்லி தமிழ்ச்சங்க 80ம் ஆண்டு மலர் வெளியீடு

புதுடில்லி: டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80ம் ஆண்டு விழாவையொட்டி நேற்று சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80ம் ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி டாக்டர் சாருலதா மணி குழுவினரின் 'இசைப் பயணம் - இந்திய பாரம்பரிய இசையும், திரை இசையும்' என்ற நிகழ்ச்சியும் மற்றும் டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80-வது ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவும் நேற்று டில்லி தமிழ்ச்சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

டில்லி தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலர் முகுந்தன், சிறப்பு விருந்தினர்களையும், கலைஞர்களையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் பங்கேற்று, டில்லி தமிழ்ச்சங்கத்தின் 80வது ஆண்டு விழா மலரை வெளியிட, டில்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் கண்ணன் ஜெகதீசன் பெற்றுக் கொண்டார்.

அதன்பின் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் பேசியதாவது:

தமிழ் மொழி மற்றும் கலாசாரம் மிகவும் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது. 1946ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட, டில்லி தமிழ்ச் சங்கம் மொழியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுடன், பாரதத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளைப் பாதுகாக்கும் பணியை செய்து வருவதோடு, 80ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement