நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கவர்னர்; அமைச்சர் கோவி.செழியன் பதிலடி

17


சென்னை" 'ஆரியம் பேசும் கவர்னர், அம்பேத்கர் குறித்து பேசவோ, திராவிடத்தை துாற்றவோ, எந்த தகுதியும் கிடையாது' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
கவர்னர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை, கிடப்பில் போட்ட கவர்னருக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்தியா முழுதும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

இதை தாங்கிக் கொள்ள முடியாமல், கவர்னர் ரவி வழக்கம்போல், தமிழக அரசுக்கு எதிராக ஓலமிட்டிருக்கிறார். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், அபத்தமான கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.

சமூக நீதி குறித்து பேசும் மாநிலத்தில், செருப்பு போட்டு செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்காகவும், தலித்துகள் தாக்கப்படுகின்றனர் என, பச்சை பொய்யை சொல்லி இருக்கிறார். பட்டியல் ஜாதியினருக்கு எதிரான குற்றங்களில், பீஹார் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கவர்னரின் சொந்த மாநிலத்தில், இப்படி அநீதி நடக்கும்போது, தமிழகம் குறித்து பேச, அவருக்கு தகுதியே கிடையாது. பீஹாரில் பா.ஜ., தயவில்தான் ஆட்சி நடக்கிறது. அதை கண்டித்து கவர்னரால் பேச முடியுமா?

சனாதனத்தை துாக்கி பிடித்துக் கொண்டே, பட்டியலின மக்கள் குறித்து கவலைப்படுகிறார் கவர்னர்.

அவரது டபுள் ரோல் நடிப்பு, தமிழகத்தில் எடுபடாது. நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு, அதிக அளவில் வன்முறைகள், கொடுமைகள் நடப்பது, பா.ஜ., ஆளும் மாநிலங்களில்தான் என்பதை, மத்திய அரசின் தரவுகளே சொல்கின்றன.

ஜாதிக் கொடுமைகளுக்கு அடிப்படையான, மனு நீதியை உயர்த்தி பிடிக்கும் கவர்னர் ரவி, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும், சமூக நீதி மாநிலத்தில், நீலிக்கண்ணீர் சிந்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனநாயக முறையில் செயல்பட்டு வரும், மாநில அரசுக்கு வேண்டுமென்றே குடைச்சல் கொடுக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பார்லிமென்டில் பேசுகையில், 'அம்பேத்கர் எனக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரை கூறியதற்கு, பகவானின் பெயரை கூறியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்' எனக் கூறியதும், நாடு முழுதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அப்போது கவர்னர் மாளிகையில் ஒரு கண்டன கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. உங்களுக்கும் அம்பேத்கர் பெயரை கோஷமிடுவது பேஷனாகி விட்டதா? ஆரியம் பேசும் நீங்கள், அம்பேத்கர் குறித்து பேசவோ, திராவிடத்தை துாற்றவோ, எந்த தகுதியும் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement