ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வானூர்: ஆரோவில்லில் தொடர் விடுமுறையையொட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில்,. சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். அமைதி பூங்காவாக உருவாக்கப்பட்ட ஆரோவில்லில் மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் ஆரோவில் பகுதிக்கு படையெடுத்தனர். மாத்திர் மந்திரியை, 'வியூ பாயிண்ட்' பகுதியில் இருந்து பார்வையிட்டதுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கடந்த மூன்று தினங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்ததாக ஆரோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்ததால் விசிட்டர் சென்டர் அமைந்துள்ள இடையஞ்சாவடி-கோட்டக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement