2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாயும் தற்கொலை

சாம்ராஜ் நகர்: குடும்ப பிரச்னையால் பெண் ஒருவர், தனது இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சாம்ராஜ் நகர் மாவட்டம், மலை மஹாதேஸ்வரா மலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடுஹோலா கிராமத்தை சேர்ந்தவர்கள் சுசீலா, 30, மகேஷ் தம்பதி. இவர்களுக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் மகனும் இருந்தனர்.

நேற்று முன்தினம் சுசீலாவின் தம்பி மஹாதேவா, அக்காவின் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த மாமா மகேஷின் மொபைல் போனையும், பணத்தையும் எடுத்து சென்றுள்ளார்.

இதனால், கோபம் அடைந்த மகேஷ், மனைவி சுசீலாவிடம், 'கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், மொபைல் போனையும் உன் தம்பி எடுத்து சென்று விட்டார்' என்று திட்டி உள்ளார்.

இதனால் மனம் வருந்திய சுசீலா, அன்றிரவு தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதே கிராமத்தில் ஒரு பண்ணையில் இருந்த கிணற்றில் குழந்தைகளை வீசி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை பண்ணை உரிமையாளர், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, கிணற்றின் அருகில் வந்தார். அப்போது கிணற்றின் அருகில் தாலி, செருப்பு உட்பட பொருட்கள் இருப்பதை பார்த்தார்.

சந்தேகம் அடைந்து கிணற்றில் எட்டிப்பார்த்த போது, சுசீலாவும், அவரின் குழந்தைகள் உடல்களும் மிதந்தன.

மலை மஹாதேவஸ்வா மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

சுசீலாவின் தந்தை வீரண்ணா, மருமகன் மகேஷ் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement