விபத்தில் மகன் பலி ஆற்றில் தாய் மாயம்

மைசூரு: பன்னுார் பாலம் மீது கார், மாருதி கார், பைக் இடையே விபத்து ஏற்பட்டதில், மகன் உயிரிழந்தார். அவரது தாய் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

மைசூரின் கருகுஷலா நகரில் வசித்தவர் பார்வதி, 58. இவரது மகன் சங்கர், 35. தாயும், மகனும் நேற்று மதியம், பணி நிமித்தமாக பைக்கில் புறப்பட்டனர். டி.நரசிபுரா தாலுகாவின், பன்னுார் பாலத்தின் மீது செல்லும் போது, இரண்டு கார்கள், பைக் இடையே விபத்து ஏற்பட்டு, ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இதில் பைக்கில் இருந்த சங்கர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது தாய் பார்வதி, கார் மோதிய வேகத்தில் பாலத்தில் இருந்து, காவிரி ஆற்றில் விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

அங்கு வந்த, பன்னுார் போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பார்வதியை, மாலை வரை தேடினர். அதன்பின் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை நிறுத்தி விட்டனர்.பன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement