பெங்களூரை குளிர்வித்த மழை வாகன ஓட்டிகள் கடும் அவதி

பெங்களூரு: பெங்களூரில் நேற்று மாலையில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்கள் தத்தளித்து செல்லும் நிலை உருவானதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

ஆந்திரா கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக பெங்களூரு, பெங்களூரு ரூரல், தட்சிண கன்னடா, உடுப்பி, தார்வாட், கதக், ஹாவேரி, கொப்பால், ராய்ச்சூர், சாம்ராஜ் நகர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, கோலார், மாண்டியா, மைசூரு, ராம்நகர், ஷிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்கூட்டியே அறிவித்திருந்தது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டது.

குளிர்ந்த காற்று



இதன்படி, பெங்களூரில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; குளிர்ந்த காற்று வீசியது. குளிர்ச்சியான சூழல் உருவானது.

பெங்களூரு விதான் சவுதா, கே.ஆர்., சதுக்கம், மெஜஸ்டிக், ராஜாஜி நகர், காந்தி பஜார், விஜயநகர், மைசூரு வங்கி, டவுன் ஹால், ரிச்மென்ட் டவுன், ஜெயநகர், டி.பி., சாலை, பிரிகேட் சாலை, சும்மனஹள்ளி பாலம், காமாட்சிபாளையா உட்பட பல பகுதிகளில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். சில இடங்களில் சாலைகள் பெரும் சேதம் அடைந்தது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

விடுமுறை



அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு விதான் சவுதா அருகே அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் பலரும் தஞ்சம் புகுந்தனர். இந்த மழை, விடுமுறை தினத்தை கொண்டாட கப்பன் பூங்காவிற்கு வந்தவர்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.

ஹாசனில் சக்லேஸ்பூர் தாலுகாவில் ஆலங்கட்டி மழை பெய்தது. சில இடங்களில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்தன. சிக்கமகளூரு, பெங்களூரு ரூரல், குடகு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இன்றும் பெங்களூரு உட்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Advertisement