காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மின் ஊழியர்கள் 21ல் போராட்டம்  

சென்னை:''மின் வாரியத்தில் 62,000 காலி பணியிடங்களை நிரப்புவது, 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு பொதுச் செயலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசின் நிர்ப்பந்ததால், தமிழகத்தில், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை மின் வாரியம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 3 கோடி மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. கேரளாவில் இருப்பது போல், ஸ்மார்ட் மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, மின் ஊழியர்களே பொருத்தி, பராமரிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

மீட்டர் வாங்குவது, பொருத்துவது, பராமரிப்பது என்று, அனைத்து பணிகளையும் தனியாரிடம் வழங்கக்கூடாது. இந்த முறையில், மின் வாரியத்திற்கு அதிக செலவாகும்.

மின் வாரியத்தில் களப்பிரிவில், 40,000 உட்பட அனைத்து பிரிவுகளிலும், 62,000 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை விரைந்து நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நாளை மக்களிடம், 5 லட்சம் துண்டறிக்கைகள் வழங்கப்படும்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 21ம் தேதி மாலையில், அனைத்து மாவட்ட மேற்பார்வை அலுவலகங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement