அவர் பெரியாறை கேட்கிறார்; இவர் காவிரியை கேட்கிறார்: 'ஜோக்' அடிப்பது போல் துரைமுருகன் 'குட்டு'

4

சென்னை: சட்டசபையில் நீர்வளத் துறை தொடர்பான விவாதம் நடந்தபோது, ஒரு எம்.எல்.ஏ.,வின் கேள்விக்கு தொடர்பில்லாமல், மற்றொரு எம்.எல்.ஏ., கேள்வி கேட்டார். 'இரண்டும் வெகு துாரம்' என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:



அ.தி.மு.க., - செந்தில்நாதன்: சிவகங்கை ஒன்றியம், சின்ன பருத்திக்குடி கண்மாயை துார் வாரி, மடை மற்றும் கலிங்கு கட்டப்படுமா?


அமைச்சர் துரைமுருகன்: நிதி நிலைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.


செந்தில்நாதன்: பெரியாறு நீர்ப்பாசன வசதி பெறும் சின்ன பருத்திக்குடி, பெரிய பருத்திக்குடி கண்மாய் உட்பட, 400க்கும் மேற்பட்ட கண்மாய்களை துார் வாரி, மடை கட்டி தர வேண்டும்.

பெரியாறு நீர்ப்பாசன வசதி பெறும் கண்மாய் அருகில் உள்ள, வீரக்கண்மாய் உள்ளிட்ட எட்டு கண்மாய்களை, பெரியாறு பாசன ஆயக்கட்டு கண்மாய் பட்டியலில் சேர்க்க வேண்டும்.


அமைச்சர் துரைமுருகன்: வைகை ஆற்றுக்கு கீழே, பெரியாறு பிரதானக் கால்வாய், 58 கி.மீ., பயணித்து இரண்டாக பிரிகிறது. சின்ன பருத்திக்குடி கண்மாயில் இரண்டு மடைகள் பழுதாகி உள்ளன. இவை இந்த ஆண்டு சீரமைக்கப்படும். கண்மாயை துார் வாரி கரையை பலப்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.


செந்தில்நாதன்: பெரியாறு நீர்ப்பாசன நீட்டிப்பு கால்வாயில் பழுதடைந்த சிமென்ட் கட்டுகளை சீரமைக்க வேண்டும்.

காளையார்கோவில் ஒன்றியம், முடிக்கரை அருகே, நாட்டார் கால்வாய் குறுக்கே, தடுப்பணை கட்டித்தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, 6,000 கண்மாய்களை சீரமைக்க, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.


அமைச்சர் துரைமுருகன்: நிச்சயம் கவனிக்கப்படும்.


தி.மு.க., - அன்பழகன்: கொள்ளிடம் ஆற்றில், கல்லணை முதல் அணைக்கட்டு கீழணை வரை, தடுப்பணை எதுவும் இல்லை. மூன்று அணைக்கட்டுகள் கட்டித் தர வேண்டும்.

இல்லையெனில் முடிதாங்கி ஊராட்சியில், ஒரு தடுப்பணையாவது கட்ட வேண்டும். அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.,க்கள் கண்ணன், பிரபாகரன் ஆகியோர் இணைந்து கேட்கிறோம்.


அமைச்சர் துரைமுருகன்: நீங்களே கேட்டால் போதும்; பரிந்துரை தேவையில்லை. முதல் உறுப்பினர் கேட்டது பெரியாறு பாசனம். இவர் கேட்பது காவிரி பாசனம். இரண்டுக்கும் வெகு துாரம். இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்தார்.




'கேள்விகளை இப்படி தான் கேட்க வேண்டும்'



சட்டசபையில் , அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்நாதன், பெரியாறு தொடர்பான கேள்விகளைக் கேட்டார். அதற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தபோது, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், காவிரி தொடர்பான கேள்வியைக் கேட்டார்.


அதற்கு, 'டென்ஷன்' அடைந்த துரைமுருகன், ''ஒரு உறுப்பினர் கேள்வி கேட்டால், அதில் பதில் தயார் செய்ய கால அவகாசம் வேண்டும். ''உதாரணத்திற்கு செந்தில்நாதன் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன், வேறு என்ன கேள்வி கேட்டுள்ளார் என்பதை அறிந்து, அதற்கும் பதில் தயார் செய்வோம். அப்போதுதான் அவர் அதை தாண்டி செல்ல முடியாது. அதற்குள்தான் கேட்பார். அதற்குதான் தயாராகி வருவோம். மற்றவர்கள் தனியாக கேள்வி கேட்க வேண்டும்,'' என, அறிவுரை வழங்கினார்.


மேலும், ''உறுப்பினர் அன்பழகன் அக்கறை இருந்தால், தனிக் கேள்வி போட்டிருக்க வேண்டும். முன்பெல்லாம் சம்பந்தம் இல்லாமல் கேட்டால், தனிக் கேள்வி போடுங்கள் எனக் கூறி விடுவோம். எனினும் அன்பழகன் கேட்டதற்காக, ஒரு தடுப்பணையாவது கட்டி தருகிறேன்,'' என்றார்.

சபாநாயகர் அப்பாவு: உங்களுக்கு உள்ள துறை அனுபவம், ஞாபசக்தி ஆகியவற்றின் மேல் நம்பிக்கை வைத்து, கேள்வி கேட்கின்றனர்.


அமைச்சர் துரைமுருகன்: கூடுமான வரையில் ஒரு கேள்விக்கு, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தயார் செய்து ஒத்திகை பார்த்து வருகிறேன். இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் போது, நான் சொல்வது தவறாக இருந்து விடக் கூடாது என்ற பயமும் எனக்கு உண்டு.இவ்வாறு, துரைமுருகன் அறிவுரை வழங்கினார்.

Advertisement