அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கான ரூ.18,500 கோடி நிதியுதவி நிறுத்தம்

1

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலை, அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு கருத்துக்களை ஊக்குவிப்பதாக கூறியுள்ள, அந்நாட்டு அதிபர் டிரம்ப், அதற்கு அளித்து வந்த, 18,500 கோடி ரூபாய் அரசு நிதியுதவியை நிறுத்தியதுடன், வரி விலக்கு சலுகையையும் ரத்து செய்யப்போவதாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலை உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்த பல்கலைக்கு சமீபத்தில் புதிய வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்தது.

பல்கலையில் யூத சமூக மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது; சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்துவது; போராட்டங்களில் மாணவர்கள் முகமூடி அணிய தடை; பேராசிரியர்களுக்கான அதிகார குறைப்பு ஆகியவை இந்த வழிகாட்டுதலில் இருந்தன.

இவற்றை ஏற்க ஹார்வர்டு பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அப்பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்தி டிரம்ப் நேற்று உத்தரவிட்டார்.

அரசின் இந்த முடிவை ஹார்வர்டு பல்கலை கண்டித்துள்ளது. இது குறித்து ஹார்வர்டு தலைவர் ஆலன் கார்பர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த வழிகாட்டுதல்கள், அரசியல் சார்புடையவை மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானவை. பல்கலை தன் சுயாட்சியை விட்டுக்கொடுக்காது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்' என, தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஹார்வர்டு பல்கலைக்கு டிரம்ப் மற்றொரு எச்சரிக்கை விடுத்தார். அதில் ''ஹார்வர்டு பல்கலை அரசியல், சித்தாந்த, பயங்கரவாத ஆதரவு கருத்துக்கள் பரப்புவதை நிறுத்தவில்லை எனில், வரி விலக்கு அந்தஸ்தை இழக்க நேரிடும்,'' என கூறியுள்ளார்.

Advertisement