பெண்கள் மீதான வன்முறை குறித்து  மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்

ஹூப்பள்ளி : ஹூப்பளியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இறந்த சிறுமியின் பெற்றோரை நேற்று முன்தினம் சந்தித்து, மாநில மகளிர் வாரியத்தின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி ஆறுதல் கூறினார். சிறுமியின் குடும்பத்திற்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவதாக கூறினார்.

பின் அவர் அளித்த பேட்டி:

குழந்தைகள், பெண்கள் மீது நடக்கும் வன்முறைகள் குறித்த புள்ளி விபரங்களை சேகரித்து மத்திய, மாநில அரசுகளுக்கும், தேசிய மகளிர் ஆணையத்திற்கும் கடிதம் எழுத உள்ளேன். பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களை நிறுவுவது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன்.

கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு மதம், கட்சி போன்றவை துணை நிற்க கூடாது. போலீசார், ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும்.

மாணவியரின் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுமியை கொலை செய்தவரை என்கவுன்டர் செய்த பெண் எஸ்.ஐ., அன்னபூர்ணாவிற்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement