பழுதடைந்த ஏ.டி.எம்., மையம் சீரமைக்க கோரிக்கை

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே, 'பெஞ்சல்' புயல் வெள்ளத்தில் சேதமடைந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., மையத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருக்கோவிலுார் அருகே மணம்பூண்டி, ரகோத்தமார் கோவில் எதிரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது.

இதன் ஏ.டி.எம்., மையம் தரைதளத்தில் உள்ளது. கடந்தாண்டு டிசம்பரில், பெஞ்சல் புயல் வெள்ளத்தில், இந்த ஏ.டி.எம்.,மையம் மூழ்கியது.

இதன் காரணமாக அதன் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கின. அதன் பிறகு அந்த மையம் சீரமைக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கி வளாகத்தில், புதிய ஏ.டி.எம்., இயந்திரத்தை பொருத்தி, செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'புதிதாக வங்கி கணக்கு துவங்கியவர்கள், புதுப்பிக்கப்பட்ட ஏ.டி.எம்., கார்டை பெறுபவர்கள் குறிப்பிட்ட வங்கி ஏ.டி.எம்., மையத்தில் தான் ஆக்டிவேட் செய்ய முடியும்.

இதனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்., மையத்தை நாடி விழுப்புரம், திருவண்ணாமலை, வேங்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது,' என்றனர்.

Advertisement