மீன் பிடி தடைக்காலம் துவங்கியது துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம்

புதுச்சேரி : புதுச்சேரியில், மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், நேற்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், தங்களது படகுகளை தேங்காய்திட்டு துறைமுகம் மற்றும் கடற்கரை ஓரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement