கோடநாடு கொள்ளை வழக்கு; சயானுக்கு மீண்டும் சம்மன்
கோவை; நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில், 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக, கேரளத்தை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக, 500க்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம், மீண்டும் விசாரணை நடத்த அவரை நாளை (ஏப்., 17)கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒருமுறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய நிலையில், தற்போது இரண்டாம் முறையாக அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மார்ச், 27ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தியிருந்த நிலையில், தற்போது சியானை விசாரணைக்கு அழைத்துள்ளதால், வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.