காட்டுக்குப்பத்தில் வடிகால் பணி தொய்வு; பொது மக்கள், வியாபாரிகள் அவதி

பாகூர் ; காட்டுக்குப்பம் - கன்னியக்கோவில் இடையே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் முதல் கன்னியக்கோவில் வரை 3 கோடியே 37 லட்ச ரூபாய் செலவில் 'யு' வடிவ வடிகால் அமைக்கும் பணியை, கடந்த பிப்., மாதம் 3ம் தேதி முதல்வர், அமைச்சர் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து, மறு நாள் முதலே கான்கீரிட் சுவர் மூலமாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால், பல இடங்களில் பணிகள் முழுமை பெறாமலும், அஸ்திவார பள்ளம் சரியாக மூடப்படாமல், திறந்த நிலையில் இருந்து வருகிறது.

குறிப்பாக, காட்டுக்குப்பம் ஏரிக்கரை செல்லும் சாலையில், தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல், கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு உள்ளது.

மேலும், சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளதால், இரவு நேரங்களில் அவ்வழியாக சென்று வரும் பொது மக்கள் விபத்தில் சிக்கி காயமடையும் அபாயம் உள்ளது.

வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதி, சமன் செய்யப்படாமல், மேடு பள்ளமாக உள்ளதால் பொது மக்களும், வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, காட்டுக்குப் பம் - கன்னியக்கோவில் இடையே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட அஸ்திவார பள்ளத்தை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement