பஸ், லாரி எல்லாம் ஓட்ட வேண்டும்!

சரக்கு வேனில் கீரை வியாபாரம் செய்யும், கோவையைச் சேர்ந்த வெண்ணிலா: கோவை, ராமநாதபுரம் ஏரியாவில் வசிக்கிறேன். திருமணமாகி கோவைக்கு வந்தபோது, ஓராண்டு வரை வீட்டை விட்டு வெளியில் வந்ததில்லை. எனக்கு தனியாக எங்கும் போக, வர தெரியாது. இன்று கோவையில் எல்லா சாலையிலும் என் வண்டி போயிட்டு வருது.

ஆரம்பத்தில் என் மாமியார் தான் கீரை வியாபாரம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அதை நான் கையில் எடுத்தேன். விடிவதற்கு முன் சைக்கிளை மிதிச்சுட்டு மார்க்கெட்டுக்கு செல்வேன். நாலு மூட்டை கீரையையும், அதில் தான் எடுத்து வருவேன். அதன்பின் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டேன்.

அடுத்து, நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு, 'மகேந்திரா மேக்ஸிமோ வண்டி வாங்கிடலாமா... கீரை மூட்டை ஏற்ற, இறக்க விற்க வசதியாக இருக்கும்' என, என் மகன்களிடம் கேட்டேன்.

'அதெல்லாம் உன்னால் ஓட்டிட முடியுமா?' என்று கேட்டனர். 'ஏன் முடியாது'ன்னு கேட்டு, நல்லா ஓட்டக் கற்று, பின் வண்டியை வாங்கி விட்டேன்.

சாலையில் 100 வண்டிகள் போகும். ஆனால், என் வண்டியை திரும்பி பார்க்காதவர்கள் குறைவு. 'ஒரு பொண்ணு எப்படி ஓட்டிட்டு போகுது பாரு' என, அவர்கள் சொல்வதை கேட்கும்போது, மிகவும் சந்தோஷமாக இருக்கம். என் கணவரும் ஊக்கப்படுத்துவார்.

தினமும் காலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை, மார்க்கெட் போய் கீரை மூட்டை எடுத்து வந்து, ஏரியாக்களில் விற்பேன்.

அதன்பின் வெள்ளலுார், இருகூர் பகுதிகளில் இருக்கும் தோட்டங்களுக்கு சென்று கீரை மூட்டையை ஏற்றி, மாலை நேரத்தில் சந்தையில் வியாபாரம் பார்ப்பேன். நமக்கு நம் வண்டி தான் கடை. அதில் வைத்தே விற்று விடுவேன். நல்லா உழைக்கிறோம். அதற்கேற்ற வருமானம் வருகிறது.

கீரை கடை போடணும் என்பது என் எதிர்கால ஆசை இல்லை. பஸ், லாரி எல்லாம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும். பல இடங்களுக்கு சவாரி போகணும். பல மனிதர்களை சந்திக்க வேண்டும். புதுமையான அனுபவங்களை சேகரிக்கணும்.

வாழ்க்கையில் ஏழையாக இருந்தால் நம் முயற்சியால், உழைப்பால் நிலைமையை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், கோழையாக இருந்தால் எதுவும் மாறாது. நான் பழைய வெண்ணிலாவாக இருந்தால், இந்நேரம் வீட்டை விட்டு கூட வெளியேற தெரியாமல் தான் அடைந்து கிடந்திருப்பேன்.

உலகம் எவ்வளவு பெரிது. சாலைகள் இவ்ளோ சந்தோஷம் தரும் என்பது எல்லாம் எனக்கு தெரியாமல் போயிருக்கும். அதனால், நாம என்ன செய்யணும் என நினைக்கிறோமோ, காலம் கடத்தாமல் துணிந்து அதை செய்து பார்த்து விட வேண்டும்.

Advertisement