கந்தசுவாமி கோவில் வளாகத்தில் குரங்கு பிடிக்க கூண்டு வைப்பு

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில், வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க, நேற்று கூண்டு வைக்கப்பட்டது.

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கந்தசுவாமி கோவில், பிரணவ மலைக்கோவில் உள்ளது. மேலும், நான்கு மாடவீதிகள் உள்ளிட்ட பகுதிகள் குடியிருப்பு வீடுகள், வணிக கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை உள்ளன.

குடியிருப்பு வீடுகளில் நுழையும் குரங்குகள் சமையல் பொருட்கள், காய்கறிகள், உணவு வகைகளையும் பிடுங்குவது, விரட்டினால் பொதுமக்களை கடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

அதேபோல், கந்தசுவாமி கோவிலுக்கு வரும் குரங்குகள், பக்தர்கள் கொண்டு வரும் பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை பறித்து செல்கின்றன. கடிக்கவும் முயல்கின்றன.

எனவே, குரங்குகளை பிடிக்க பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுகுறித்து நம் நாளிதழிலில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதையடுத்து நேற்று கந்தசுவாமி கோவில் வளாக பகுதிகளில், குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில், கூண்டு வைக்கப்பட்டது.

தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளிலும், கூண்டு வைத்து, குரங்குளை பிடித்து வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement