குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு உருவாகும் அபாயம்

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில், குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால், சுகாதார சீர்கேடு அபாயம் எழுந்துள்ளது.

வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், ஆசியாவின் பெரிய பேருந்து முனையம் இயங்கி வருகிறது. தினமும் ஒரு லட்சம் நபர்கள் இங்கிருந்து, பேருந்துகளில் வெளியூர் சென்று வருகின்றனர்.

இந்த பேருந்து முனையத்தின் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே, அணுகு சாலை முழுதும், 500 அடி நீளம், 20 அடி அகலத்தில்,. ஆண்டு முழுதும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

இதனால், கொசு உற்பத்தி மிகுதியாகி, பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது. அருகாமை குடியிருப்பு வாசிகளும் மிகுந்த அவஸ்தை படுகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அணுகு சாலை ஓரம், மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் ஒரு வருடத்திற்கு முன் அடைப்பு ஏற்பட்டு, அது இன்னமும் சரி செய்யப்படவில்லை.

இதனால், மழை பெய்யும்போது, சாலையில் தேங்கும் நீர், வழிந்தோடி, வடிகாலில் கலக்காமல், அணுசாலையில் தேங்கி நிற்கிறது.

தவிர, அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் வடிகாலில் கலக்கப்பட்டு, அடைப்பு காரணமாக, தொடர்ந்து செல்ல முடியாமல், வடிகாலில் உள்ள ஓட்டை வழியாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், வடிகாலில் உள்ள அடைப்பை நீக்க, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement