துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரிடம் கவர்னர் நலம் விசாரிப்பு

புதுச்சேரி: இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் செந்தமிழை, கவர்னர் கைலாஷ்நாதன் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

காரைக்காலில் மீன் வள மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழாவில் பங்கேற்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று முன்தினம் காரைக்கால் சென்றிருந்தார்.

அப்போது, சமீபத்தில் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மீனவர் செந்தமிழ் வீட்டிற்கு, கவர்னர் கைலாஷ்நாதன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கேட்டறிந்த கவர்னர், செந்தமிழ் மேல் சிகிச்சைக்கு, அரசு உதவும் என உறுதி அளித்தார். தொடர்ந்து, பட்டினச்சேரி கிராமத்திற்கு சென்று மீனவ மக்களோடு கலந்துரையாடிய கவர்னர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றித் தர மத்திய, மாநில அரசுகள் அதனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதில், கவர்னரின் செயலர் மணிகண்டன், காரைக்கால் கலெக்டர் சோமசேகர அப்பாராவ், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், துணை இயக்குநர் கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement