சித்திரைத்திருவிழா பணிகள் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஏப்.28 முதல் மே 17 வரை சித்திரைத் திருவிழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்க உள்ளன.

இதையொட்டி அம்மன் வீதி உலா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளன.

திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.

இதற்காக கோயிலை சுற்றி நான்கு சித்திரை, மாசி வீதிகள், கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதியில் மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கமிஷனர் சித்ரா ஆய்வு செய்தார்.

அழகர்கோவில் மலையில் இருந்து புறப்பட்டு, நகருக்கு வருகை தரும்போது மாநகராட்சி எல்லைக்குள் அழகர்கோவில் மெயின் ரோடு, கடச்சனேந்தல், மூன்றுமாவடி, சர்வேயர் காலனி, புதுார், தல்லாகுளம் பகுதிகளில் பக்தர்களுக்காக குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம்கள், மின் விளக்குகள், ரோடுகள் சீரமைக்க வேண்டிய பகுதிகள் குறித்தும் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், நகர்நல அலுவலர் இந்திரா, உதவி நகர்நல அலுவலர் அபி ஷேக், செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவிச் செயற்பொறியாளர்கள் முத்து, காமராஜ், ஆரோக்கியசேவியர், மயிலேறிநாதன் பங்கேற்றனர்.

Advertisement