கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்; மத்திய சைபர் பிரிவை நாடும் போலீசார்

1

புதுச்சேரி; கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைந்த மையத்தின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடியுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சமீப காலமாக இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு இ-மெயில் வந்தது.

அதனைத் தொடர்ந்து பெரியக்கடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்ற பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மின்னணு சாதனங்கள் மூலம் வதந்தியை பரப்புதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இ-மெயில் முகவரியை ஆய்வு செய்ததில், மர்ம நபர் 'டார்க் நெட்'டை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதனால், இந்த மிரட்டல் வெளிநாட்டினர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனையொட்டி, புதுச்சேரி போலீசார், மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைந்தமையத்தின் உதவியை கோரி இ-மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், சைபர் கமண்டோக்களை கொண்ட தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement