கடல் நீர் தன்மை அறியும் கருவி; கடலில் இறக்க தயாராக உள்ளது

புதுச்சேரி; மத்திய அரசு புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த மையத்தின் மூலம், புதுச்சேரி கடல் நீரின் தன்மையை அறிய அதிநவீன கருவிகள் பொருத்திய மிதவையை, புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கருவி 2 மாதங்களுக்கு ஒரு முறை கரைக்கு கொண்டு வந்து பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த கருவி கரைக்கு கொண்டு வரப்பட்டு, பராமரிப்பு பணி முடிந்துள்ளது. கடலில் இறக்க தயார் நிலையில், இருக்கிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுச்சேரியில், 2வது மிதவை அமைக்கப்பட்டுள்ளது. கடல் நீரின் தரம், காற்றின் தன்மை உள்ளிட்ட பல தகவல்களை இந்த மிதவை தருகிறது. கடல் நீர் வண்ணங்கள் மற்றும் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மிதவை இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில், தண்ணீரின் ஆக்சிஜன் அளவு, தண்ணீரின் தட்ப வெப்பம், கடல் நீரோட்டம், மீன்கள் இருக்கும் இடம், என பல்வேறு தகவல்களை இந்த கருவி மூலம் அறிய முடியும்' என்றார்.

Advertisement