குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு

ஆமதாபாத்; குஜராத் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.



2023ம் ஆண்டு ஜூனகாத் மாவட்டம் விசாவதார் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., புபேந்திர பயானி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.,வில் இணைந்தார். கடி தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., கர்சன் சோலங்கி பிப்.4ம் தேதி காலமானார்.


இதனால் இந்த 2 தொகுதிகளும் காலியாக உள்ளன. அதற்கான இடைத்தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை.


இந் நிலையில் இடைத்தேர்தலில் தனித்து போட்டி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் குஜராத் மாநில தலைவர் சக்திஷ்ன் கோஹில் கூறி உள்ளதாவது:


மூன்றாவது அணிக்கு குஜராத் மக்கள் என்றுமே ஆதரவு அளித்தது இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுக்கு மட்டுமே மக்கள் ஓட்டு போடுவர்.


கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டனர். அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினர். ஆனால் காங்கிரசை சேதாரப்படுத்தி அவர்களால் வெறும் 11 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற முடிந்தது.


பா.ஜ.,வை வீழ்த்த காங்கிரசால் மட்டுமே முடியும். வேட்பாளர்களை ஆம் ஆத்மி வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி போராடும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement