சிறிய அளவிலான கட்டுமான பணிகளுக்கும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கிடைக்கும்!

கட்டுமான துறையில் பணிகளை எளிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகமாகி உள்ளன. பொதுவாக கட்டடங்கள் கட்டும் போது கம்பி, சிமென்ட், மணல், ஜல்லி போன்ற பொருட்களை வாங்கி, சரியான அளவில் சேர்த்து கான்கிரீட் கலவை தயாரிக்கும் அளவுக்கு மக்களிடம் பொறுமை இல்லை.

பெரும்பாலான இடங்களில் இது போன்ற பொருட்களை வாங்கி இருப்பு வைத்து தேவையான நேரத்தில் கான்கிரீட் கலவை தயாரிப்பதற்கு தேவையான இடவசதியும் இல்லை. இதனால், குறுகலான பகுதிகளில் வீடு கட்டுவோர் அதிக சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வாக ரெடிமிக்ஸ் கான்கிரீட் வழங்கும் நிறுவனங்கள் அதிக அளவில் வந்துள்ளன. சில ஆண்டுகள் முன்பு வரை பெரிய அளவிலான அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்கு மட்டும் தான் இது போன்ற கான்கிரீட் வாங்க முடியும் என்று மக்கள் நினைத்தனர்.

ஆனால், தற்போது இதில் சூழல் மாறியுள்ளதால், சாதாரண வீடு கட்டுவதற்கும் துாண்கள், மேல் தளம் அமைப்பதற்கான பணியில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையை பயன்படுத்த முடியும் என்ற சூழல் வந்துள்ளது. இதற்கு ஏற்ப மிக குறைந்த அளவுக்கும் கான்கிரீட் கலவையை வழங்க ரெடி மிக்ஸ் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

கட்டடம் கட்டுவதில் மேல் தளம் அமைப்பது போன்ற பெரிய பணிகள் மட்டுமல்லாது, சிறிய அளவிலான பணிகளுக்கு தேவையான அளவிலும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் வழங்கப்படுகிறது. உங்கள் இடத்தில் என்ன பணிக்கு எவ்வளவு கான்கிரீட் கலவை தேவை என்பதை துல்லியமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

அஸ்திவார துாண்கள் அமைத்தல், பீம்கள் அமைத்தல், 'சன்ஷேட்' மேல் தளம் போன்ற ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு கான்கிரீட் தேவைப்படும். அது என்ன தரத்தில் இருக்க வேண்டும் என்பதை பொறியாளர் உதவியுடன் துல்லியமாக கணக்கிட்டு, ரெடிமிக்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்தால் போதும்.

நீங்கள் சொல்லும் நேரத்தில் கான்கிரீட் கலவை உங்கள் இடத்துக்கு வந்து சேரும். இதில், 10 அல்லது 50 கன அடி அளவுக்கு கான்கிரீட் தேவை என்றாலும் கவலைப்பட வேண்டாம். குறைவான அளவில் கான்கிரீட் கலவையை தனியாக தயாரித்து கொண்டு வந்து கொடுக்கும் வகையில் சிறிய வாகனங்களையும் ரெடிமிக்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

உங்கள் வீட்டில் எந்த இடத்தில் என்ன வகையிலான கான்கிரீட் கலவை தேவை என்பதை முடிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில், சிமென்ட், எரிசாம்பல் விகித அடிப்படையில் வகைப்பாடு மாறுபடும் என்பதை மக்கள் புரிந்து, அதற்கு ஏற்ற கலவையை தேர்வு செய்ய வேண்டும்.

சிமென்ட் அதிகமாக இருக்க வேண்டும், அதுவும் பெரிய கட்டுமானங்களுக்கான கிரேடில் இருக்க வேண்டும் என்று நினைத்து பலரும் தவறு செய்கின்றனர். உண்மையில் சிமென்ட் தேவையான அளவுக்கு மட்டும் இருந்தால் போதும், எரிசாம்பல் சேர்ப்பு அதிகரித்தால் நல்லது என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என்கின்றனர், கட்டுமான துறை வல்லுநர்கள்.

Advertisement