குமரி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவு * நேற்று முதல் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

நாகர்கோவில்:பராமரிப்பு பணிகள் முடிந்து கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் நேற்று மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டது.

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைத்து கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு கடந்த ஜன., ஒன்றாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. கடலின் உள்ளே பாலம் அமைந்துள்ளதால் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாவது முறையாக கடந்த 15 -ம் தேதி பராமரிப்பு பணிகள் தொடங்கியது.

டெல்லியில் உள்ள அரசு ஏஜென்சி நிறுவனமான ரைட்ஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தூத்துக்குடி கேம்பஸ் பொறியாளர்களுடன் இணைந்து இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பாலத்தின் உறுதித் தன்மையை பரிசோதிக்க பிளாஸ்டிக் ட்ரம்களின் தண்ணீர் நிரப்பி 24 மணி நேரம் வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 200 கிலோ வீதம் 962 டிரம்களில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இந்த சோதனை நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்துகாலை 8 : 00 மணி முதல் இதன் வழியாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரியில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் நடக்கும் பாதைகளில் அதிகமான நாய் தொல்லை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சமீப நாட்களில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். எனவே கோடை சீசனுக்கு முன்பாக தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement