மூணாறில் அதி நவீன மருத்துவமனை கட்டும் திட்டம்: உயர் நீதிமன்றம் தலையீடு

மூணாறு : மூணாறில் அதி நவீன மருத்துவமனை கட்டும் திட்டம் கைவிடப்படும் அவலம் நிலவுவதால், அப்பிரச்னையில் கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டது.

சுற்றுலாவில் உலக அளவில் பிரசித்து பெற்ற மூணாறில் அரசு சார்பில் மருத்துவமனை இல்லை.

அதனால் தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள், பழங்குடியினர் ஆகியோர் சிகிச்சை பெற கோட்டயம், தேனி ஆகிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். அதனை தவிர்க்கும் வகையில் மூணாறில் அதிநவீன மருத்துவமனை கட்ட சுகாதாரதுறை முடிவு செய்தது.

அதற்கு தேவிகுளம் சமூக சுகாதார மையம் அருகே வருவாய்துறை 5 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்தது. ஓராண்டுக்குள் நிலம் விதிமுறைபடி சுகாதாரதுறை கையகப்படுத்தி கட்டுமான பணிகளை துவக்கவேண்டும் என கடந்தாண்டு ஏப்ரலில் ஒப்பந்தமிடப்பட்டது.

ரூ.78.25 கோடி செலவில் மருத்துவமனை கட்ட சுகாதாரதுறை முடிவு செய்த நிலையில், அதற்கு கேரள ஆளுநரும்ஒப்புதல் அளித்தார்.

ஒப்பந்தமிடப்பட்ட கால அளவு பூர்த்தியாகுவதற்கு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி எதுவும் நடக்காததால் திட்டம் கைவிடப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அதனால் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பினர் கேரள உயர் நீதி மன்றத்தை நாடினர்.

அப்பிரச்னையில் தலையிட்ட நீதிமன்றம் திட்டம் கைவிடப்படாமல் தவிர்க்க செய்ய வேண்டியதை குறித்து அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

Advertisement