மனைவி, மாமியார் மிரட்டல்; கணவர் துாக்கிட்டு தற்கொலை

லக்னோ: உத்தர பிரதேசத்தில், மனைவி, மாமியார் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் கூறி, கணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உ.பி.,யின் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ், 33. இன்ஜினியரான இவர், பிரியா என்பவரை காதலித்து 2023ல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


எட்டாவா மாவட்டத்துக்கு சமீபத்தில் சென்ற மோஹித் யாதவ், ஹோட்டலில் உள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன், மனைவி பிரியா, அவரது தாய் ஆகியோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, அதை வீடியோவாக பதிவு செய்துஉள்ளார்.



அதன் விபரம்: பிரியாவின் கருவை கலைக்கக் கோரி அவரது தாய் வற்புறுத்தி வருகிறார். எங்களது நகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டு, அவர் தர மறுக்கிறார்; அவருடன் சேர்ந்து, மனைவி பிரியாவும் என்னை மிரட்டி வருகிறார்.


என் வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தரவில்லை என்றால், என்னையும், என் குடும்பத்தினரையும் வரதட்சணை வழக்கில் சிக்க வைப்பேன் என, பிரியா மிரட்டி வருகிறார். அவரது தந்தை மனோஜ் குமார், எனக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார்.


பிரியாவின் சகோதரர் என்னை கொல்லப் போவதாக மிரட்டுகிறார். ஒட்டுமொத்த குடும்பமே, என்னையும், என் குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருகிறது. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா... அப்பா. நான் இறந்த பின்னும் நீதி கிடைக்காவிட்டால், என் சாம்பலை சாக்கடையில் எறியுங்கள்.


இவ்வாறு அந்த வீடியோவில் கண்ணீர் மல்க மோஹித் யாதவ் கூறி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement