முதியவரிடம் 5 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலை
புதுச்சேரி: முதியவரிடம் 5 சவரன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, வைத்திக்குப்பம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மனோகரன், 67; தச்சு தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பரிந்து தனியாக வசித்து வரும் மனோகரன், கடந்த மாதம் கடற்கரையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, வேலுார், ஆரணியை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மனோகரனிடம் பேசி பழக்கமாகியுள்ளார். இதையடுத்து, மனோகரனிடம் மொபைல் எண்ணை பெற்றுக் கொண்டு அப்பெண் ஊருக்கு சென்றார்.
பின், கடந்த மார்ச் 25ம் தேதி மீண்டும் புதுச்சேரிக்கு வந்த அப்பெண் மனோகரனுடன் இணைந்து கடற்கரைக்கு சென்றுவிட்டு, இருவரும், 2 பீர் வாங்கி கொண்டு, பைக்கில் மனோகரன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு இருவரும் மது அருந்திய நிலையில், போதையில் மனோகரன் துாங்கிவிட்டு, காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 சவரன் நகையை திருடி கொண்டு அப்பெண் மாயமானார்.
மனோகரன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.