வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 4 பேரிடம் ரூ. 12 லட்சம் மோசடி தம்பதிக்கு போலீசார் வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த ராம், 26; தன்வீர், 26; செல்வா, 27 மற்றும் முகமது ஆசிக், 26; ஆகியோருக்கு துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தம்பதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகினர். அவர்கள், தாங்கள் மனிதவள அலுவலகம் நடத்தி வருவதாகவும், பட்டதாரி இளைஞர்களை அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதைநம்பிய 4 பேரும் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு, விமான டிக்கெட், விசா கட்டணமாக 3 லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாய், அவர்களிடம் கொடுத்தனர். பின், தம்பதி அவர்கள் 4 பேருக்கும் ஜெர்மன் மற்றும் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட், விசாவை அளித்தனர்.

அதை எடுத்து கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு 4 பேரும் சென்றனர். அங்கு, அவர்களது விமான டிக்கெட் மற்றும் விசாவை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவை போலியானது என்பது தெரியவந்தது. அதன்பின், அந்த தம்பதியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 பேருக்கு நேற்று முன்தினம் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் பங்கேற்ற டி.ஐ.ஜி., சத்திய சுந்தரத்திடம் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி., போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், புதுச்சேரி இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக ரூ. 12 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement