வில்லியனுார் அருகே ஆற்றில் மூழ்கிய டிரைவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே ஆற்றில் குளித்து மாயமான டிரைவரை தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி தேடியும் கிடைக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம், மங்களபுரி நகர் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றங்கரையில் நேற்று முன் தினம் மதியம் ஆற்றில் குளித்தனர்.

அப்போது மேட்டுப்பாளையம் சானரப்பேட்டை கிழக்கு வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அன்புசெல்வன்,33; டிரைவர். இவர் ஆற்றில் நீச்சல் அடித்தவாறு அந்தகரை பகுதிக்கு சென்று, மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தார். அழமான பகுதியில் வந்தபோழுது திடீரென நீரில் மூழ்கி மாயமானார்.

கரையோரம் குளித்துக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் அன்புசெல்வத்தை மீட்க ஆழமான பகுதிக்கு சென்று தேடியுள்ளனர்.

அவர் கிடைக்காததால், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போட் மூலம் ஆழமான பகுதிக்கு சென்று தேடினர்.

மேலும் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் தலைமையிலான போலீசாரும், மீனவர்களை அழைத்து வந்து மீன் பிடி பைபர் படகு மூலம் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு 9:15 மணி வரை மாயமானவர் கிடைக்காததால், இன்று (21ம் தேதி) தேடுதல் பணி தொடரும் என தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement