காந்தி சாகர் சரணாலயத்துக்கு மாற்றப்பட்ட சிவிங்கி புலிகள்

போபால் : மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு சிவிங்கி புலிகள், அங்குள்ள காந்தி சாகர் சரணாலயத்துக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டன.


நம் நாட்டில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்படும் சிவிங்கி புலிகள், 70 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2022ல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.


அந்த ஆண்டு செப்டம்பரிலும், 2023 பிப்ரவரியிலும், தென்னாப்ரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து 20 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டன. இதில், ஒன்பது சிவிங்கி புலிகள் இறந்தன.


மீதமிருந்த சிவிங்கி புலிகளில் சில குட்டிகளை ஈன்றன. இதையடுத்து, குனோ தேசிய பூங்காவில், இந்தியாவில் பிறந்த 14 குட்டிகள் உட்பட 26 சிவிங்கி புலிகள் உள்ளன. இவற்றில் சில தேசிய பூங்காவின் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன.


இந்நிலையில், இங்குள்ள சில சிவிங்கி புலிகளை மண்டசூர் மற்றும் நிமூச் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காந்தி சாகர் சரணாலயத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.


அதன்படி, பிரபாஷ் மற்றும் பவக் என்ற இரண்டு சிவிங்கி புலிகள், காந்தி சாகர் சரணாலயத்திற்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டன. கூண்டில் அடைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான வகையில் சாலை மார்க்கமாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், காந்தி சாகர் சரணாலய வனப்பகுதியில் விடுவித்தார்.

Advertisement