ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த ஜெர்மன் பெண் பயணம் ரத்து

சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, கேட் பகுதியில் பயணியர் காத்திருந்தனர்.

அப்போது, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த களோடியா டோரா ,57, என்ற பெண், இலங்கை வழியாக ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகருக்கு செல்ல வந்திருந்தார்.

அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, அதிநவீன ஜி.பி.எஸ்., கருவி ஒன்றை வைத்திருந்தது தெரிந்தது.

இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, இவற்றை விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது.

ஜி.பி.எஸ்., கருவியை பறிமுதல் செய்த அதிகாரிகள், எதற்காக கொண்டு வந்தீர்கள் என கேட்டனர். அதற்கு அப்பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

பின், 'கடந்த வாரம் சுற்றுலாவுக்காக சென்னைக்கு வந்தேன். ஜெர்மனில் இருந்து ஜி.பி.எஸ்., கருவியை எடுத்து வந்தேன்' என்று கூறியுள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்காத அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்து, சென்னை விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

* விமானத்தில் கோளாறு

சென்னையில் இருந்து டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானம், நேற்று அதிகாலை 5:55 மணிக்கு, 155 பேருடன் புறப்பட தயாரானது.

விமானம் ரன்வேயில் ஒடத்துவங்கும்முன், இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பயணியர் அனைவரும் விமானத்திற்குள் பத்திரமாக அமர வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழு, விமானத்தில் எதனால் கோளாறு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தனர்.

விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து, பிரச்னை சரி செய்யப்பட்டு, காலை 7: 00 மணிக்கு, விமானம் டில்லி புறப்பட்டது.

Advertisement