'இது தி.மு.க.,வினர் உலவும் பகுதி': எச்சரிக்கை பலகை வைக்க பா.ஜ., யோசனை

5

சென்னை : 'அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமிர், தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து வருகிறது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



சென்னை வடபழனி ஆற்காடு சாலை அருகில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது, விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜாவின் அல்லக்கைகளான, அக்கட்சியின் 136வது வட்ட பொருளாளர் கார்த்தி மற்றும் வினோத், போலீசார் கண்முன்னே கடுமையான தாக்குதல் நடத்தியிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.

அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமிர், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

தி.மு.க., - எம்.பி., கனிமொழி பங்கேற்ற விழாவில், பெண் போலீசாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், இதே பிரபாகர் ராஜாவின் அடியாட்கள் தான். தொடர்ந்து, அவரது அல்லைக்கைகளின் அராஜகம் அதிகரித்து கொண்டே இருந்தாலும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., ரவுடிகள் மீது, காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில், குறைந்தபட்சம் இந்த இடங்களில், 'தி.மு.க.,வினர் உலவும் பகுதி; கவனமுடன் இருக்கவும்' என்ற எச்சரிக்கை பலகையாவது வைத்தால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்புள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement