ஒரு சமூகத்தின் முதல்வர் விஜயேந்திரா கடும் தாக்கு

தாவணகெரே: ''முதல்வர் சித்தராமையா பர்தா அணிந்து செல்லும் சூழலுக்கு வந்துவிட்டார்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தாவணகெரேவில் நேற்று பா.ஜ., தரப்பில் 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை' நடந்தது.

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:

சித்தராமையா, ஒரு சமூகத்திற்கான முதல்வராக மாறிவிட்டார். அவர் ஒரு ஹிந்து விரோதி. தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை கொள்ளையடித்து வருகிறார்.

சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறார். பர்தா அணிந்து திரியும் சூழலுக்கு வந்துவிட்டார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஏழைகள், பால் வாங்க முடியாத சூழலிலும், விவசாயிகள் நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

ஆனால், கர்நாடகாவோ ஊழலில் நாட்டிலே முதலிடத்தில் உள்ளது. ஜாதிவாரி அறிக்கையை வைத்து லிங்காயத், ஒக்கலிகர்கள் இடையே பிரச்னையை உண்டாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

ஜாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து சமூகங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம். காங்கிரஸ் அரசிற்கு அனைவரும் சேர்ந்து பாடம் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement