துாத்துக்குடியில் மீனவர் கொலை தொடரும் படுகொலைகளால் பீதி

துாத்துக்குடி: -துாத்துக்குடி கடற்கரையில் மாலுமி ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட நிலையில், மீனவர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டு உள்ளார்.

துாத்துக்குடி மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்த செந்துார்பாண்டி மகன் தங்கராஜ், 22; மீனவர். இவர் வழக்கம் போல நேற்று அதிகாலை, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் துாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றது. மதுபோதை தகராறில் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

துாத்துக்குடி கடற்கரை பகுதியில் மாலுமி மரடோனா கொலை செய்யப்பட்ட மறுநாளில், மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், கடற்கரை பகுதி மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:

துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம் அதிகளவில் உள்ளது. கடற்கரை முட்புதர்களில் எப்போதும் சிலர் அமர்ந்து, மது அருந்துகின்றனர். இதனால், குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

மீனவ சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என கலெக்டர், எஸ்.பி., மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, குற்றச்செயல்களை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement