மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்; வி.ஐ.டி., துணைத்தலைவர் செல்வம் அறிவுரை

சென்னை: ''பாதிக்கப்பட்டோரின் பிரச்னைகளை தீர்க்க, சட்டம் பயிலும் மாணவர்கள், கடினமாகவும், நேர்மையாகவும் உழைக்க வேண்டும்,'' என, வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் அறிவுரை வழங்கினார்.

வி.ஐ.டி., சென்னை வளாகத்தில், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுத்தும் மத்தியஸ்தம் போட்டி நடந்தது.

தகுதி சுற்றில், தமிழகம், கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 27 சட்டக்கல்லுாரிகளை சேர்ந்த, 104 மாணவ -- மாணவியர் பங்கேற்றனர். மும்பை அரசு சட்டக்கல்லுாரி மாணவியர் முதல் பரிசை வென்றனர்.

கடந்த, 18ம் தேதி நடந்த நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

தாய்லாந்து நாட்டின் துணை துாதர் ரச்சா அரிபர்க், சென்னையில் உள்ள தாய்லாந்து துணை துாதரக அதிகாரி பனுடாஜ் ரஷ்மிடடா, என்.எல்.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாராயணமூர்த்தி, வி.ஐ.டி., துணை தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், தாய்லாந்து துணைத்துாதர் ரச்சா அரிபர்க் பேசியதாவது:

ஆசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவை உலகம் நம்பியுள்ளது. உலகுக்கு அமைதியை போதிக்கும் நாடு இந்தியா. பிற நாடுகளின் நலன்களை கருத்தில் வைத்து, நல்லெண்ண அடிப்படையில் இந்தியா செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி., துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:

மனிதர்களின் நாகரிகத்தில் இருந்தே மத்தியஸ்தம் இருக்கிறது. எகிப்து, சீனா, கிரேக்கம், மத்திய கிழக்கு, அரபு நாடுகளில் கூட மத்தியஸ்தம் இருந்துள்ளது.

ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றிலும் மத்தியஸ்தம் இருந்துள்ளது. உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் தீர்வுக்கான ஒரே வழி மத்தியஸ்தம் தான்.

வழக்குகளில் தீர்வு காண, மக்கள் வழிக்கறிஞர்களை நம்புகின்றனர். பாதிக்கப்பட்டோரின் பிரச்னைகளை தீர்க்க, சட்டம் பயிலும் மாணவர்கள், கடினமானவும், நேர்மையாகவும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement