வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் முடிவு என்ன?

5


புதுடில்லி: பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அந்நாடு தடை விதித்து உள்ளதால், மாற்றுப்பாதையில் விமானங்களை இயக்க போவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. இண்டிகோ நிறுவனமும் இது குறித்து விளக்கமளித்துள்ளது.


காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அந்நாட்டுடன் உறவு துண்டிப்பு, விசா ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தானும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அனுமதியை ரத்து செய்தது.

மாற்றுப்பாதை



இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமான நிறுவனங்களுக்கு அந்நாடு தடை விதித்து உள்ளது. இதனால், வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து கிளம்பி வரும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். வான்வெளி மூடப்படுவதால், பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது நாங்கள் எப்போதும், எங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அசவுகரியம்



அதேபோல், இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வான்வெளியை பாகிஸ்தான் திடீரென மூடியதால், சில சர்வதேச விமானங்கள் பாதிக்கப்படக் கூடும். இதனால் ஏற்படும் அசவுகரியங்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். பயணிகளுக்கு உதவவும், விரைவாக செல்லவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. விமான பயணத்தின்தற்போதைய நிலையை மீண்டும் சரிபார்க்கவும், உங்கள் விமானம் பாதிக்கப்பட்டு இருந்தால், மாற்று வழியை பரிசீலனை செய்யலாம். அல்லது இணையதளம் மூலம் கட்டணத்தை திரும்ப பெறலாம். உங்கள் பொறுமையை நாங்கள் மதிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement