10 நகரங்களில் வெயில் சதம்: வானிலை மையம் தகவல்

சென்னை: 'தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை, கரூர் பரமத்தி நகரங்களில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவானது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன் அறிக்கை:



தமிழகத்தின் மீது, வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே, 1 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

10 நகரங்களில் சதம்



நேற்று மாலை நிலவரப்படி, மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி ஆகிய நகரங்களில், 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, திருச்சி, வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. தர்மபுரி, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருத்தணி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement