உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்

புதுடில்லி: '' உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை. அது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.
டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: மக்களுக்கு புதிய வசதி கிடைக்கிறது. அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவை அனைவருக்கும் கிடைப்பது கிடையாது. ஒருவருக்கு குறையும் போது, மற்றொருவருக்கு அதிகரிக்கும். இது நீதி. உலகம் இரண்டு வழிகளில் சிந்திக்கிறது. இரண்டு பாதைகளை பின்பற்றினர். தற்போது, இந்தியா உடன் இணைந்து 3வது பாதையை தேர்வு செய்தனர். தற்போது, உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை. அது இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது.
நமது இயல்பிலும், மாண்பிலும் அஹிம்சை உள்ளது. ஆனால், நீங்கள் என்ன செய்தாலும் சிலர் மாற மாட்டார்கள். தொடர்ந்து உலகிற்கு தொல்லை கொடுப்பார்கள். அது பற்றி என்ன செய்ய வேண்டும். அஹிம்சை என்பது நமது மதம். குண்டர்களுக்கு பாடம் கற்பிப்பதும் நமது மதம். நமது அண்டை வீட்டாரை நாம் தொந்தரவு செய்வது கிடையாது. ஆனால், ஒருவர் தொந்தரவு செய்தால் என்ன செய்வது. அரசனின் கடமை மக்களை பாதுகாக்க வேண்டியது. அரசன் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
முன்னதாக, நிகழ்ச்சி துவங்கியதும், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


