துப்பாக்கி சுடுதல்: ஷாம்பவி 'தங்கம்'

புதுடில்லி: துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் மஹாராஷ்டிரா வீராங்கனை ஷாம்பவி தங்கம் வென்றார்.
டில்லியில், குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் மஹாராஷ்டிராவின் ஷாம்பவி, 633.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய 16 வயது வீராங்கனை ஷாம்பவி, 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ஹரியானாவின் ரமிதா (252.1 புள்ளி) வெள்ளி வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மேற்கு வங்கத்தின் மெஹுலி கோஷ் (231.0) வெண்கலத்தை கைப்பற்றினார்.
நடப்பு தேசிய சாம்பியன் அனன்யா நாயுடு (மஹாராஷ்டிரா), ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஷ்ரேயா அகர்வால் (மத்திய பிரதேசம்) ஏமாற்றம் அடைந்தனர்.
'யூத்' பெண்கள் பிரிவு (10 மீ., 'ஏர் ரைபிள்') பைனலில் அசத்திய ஷாம்பவி, 253.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கர்நாடகாவின் நிதி மிட்டல் (251.8 புள்ளி), மத்திய பிரதேசத்தின் கவுதமி முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஜூனியர் பெண்கள் பிரிவு (10 மீ., 'ஏர் ரைபிள்') பைனலில் ரமிதா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வெள்ளி, வெண்கல பதக்கத்தை முறையே ஷாம்பவி, மன்யா மிட்டல் (உ.பி.,) வென்றனர்.