சான்றிதழ் விவகாரம்: 'ஓலா'வுக்கு அரசு நோட்டீஸ் மே 1 வரை மத்திய போக்குவரத்து அமைச்சம் கெடு

புதுடில்லி,:விற்பனை நிலையங்களுக்கு வர்த்தக சான்றிதழ் பெறாதது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, 'ஓலா எலக்ட்ரிக்' நிறுவனத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஓலா நிறுவன விற்பனை நிலையங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த சாலை போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது நிறுவனத்தின் பெரும்பாலான விற்பனையகங்களுக்கு வர்த்தக சான்றிதழ் பெறாதது தெரிய வந்தது.

அதுமட்டுமல்லாமல் பதிவு செய்யப்படாத வாகனங்களை காட்சிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது முதன் முறையாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுஉள்ளது. இதுதொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மூன்று நாட்களுக்கு முன்பு ஓலா நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பிஉள்ளது.

நாடு முழுதும் ஓலாவுக்கு எவ்வளவு விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை மையங்கள் உள்ளது என்பது குறித்த தெளிவான தகவல்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் எவ்வளவு வர்த்தக சான்றிதழ்களை பெற்றுள்ளது என்ற தகவல்களையும் வழங்குமாறு தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 7,820 வாகனங்களை விற்பனை செய்ததாக தெரிவித்திருந்த நிலையில், அவற்றின் மாடல்கள் குறித்த விபரங்களையும் கேட்டுள்ளது. வரும் மே 1ம் தேதிக்கு முன்னதாக பதிலளிக்க ஓலாவுக்கு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement